பார்த்திபன் Pt web
தமிழ்நாடு

நடிகர் பார்த்திபனுக்கு ‘சாதி-மதமற்றவர்’ சான்றிதழ்.. ஒரு வாரத்தில் வழங்க நீதிமன்றம் உத்தரவு.!

நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி-மதமற்றவர்' என்ற சான்றிதழை ஒரு வாரத்துக்குள் வழங்க சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PT WEB

நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி - மதமற்றவர் என்று ஒரு வாரத்திற்குள் சான்று வழங்குமாறு சம்பந்தப்பட்ட தாசில்தாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1958 ம் ஆண்டு ஜனவரி 14 ம் தேதி பிறந்த தனக்கு பிறப்பு சான்று இல்லை எனவும், பழைய எஸ்.எஸ்.எல்.சி படிப்பை முடித்த பின் சான்றுகளை பெறவில்லை எனவும் தனது ஜாதி, மதத்தை தெரிவிக்கும் பிறப்பு சான்றோ, கல்விச் சான்றுகளோ தன்னிடம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்

ஜாதி, மதம், மொழி அடிப்படையிலான பிளவுகள், தேச ஒற்றுமைக்கு பாதிப்பானது என்பதால், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ, ஜாதி - மதமற்றவர் என சான்று கோரி வேளச்சேரி தாசில்தாரருக்கு விண்ணப்பித்ததாகவும், அந்த விண்ணப்பம், சோழிங்கநல்லூர் தாசில்தாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். தேர்தல் பணிகள் காரணமாக தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க இயலவில்லை என வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்து வருவதால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன், இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரித்து நீதிபதி ஒரு வாரத்திற்குள் நடிகர் பார்த்திபனுக்கு ஜாதி மதம் மற்ற சான்றிதழ் வழங்குமாறு சோளிங்கநல்லூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார் அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை 29 ம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.