தமிழ்நாடு

அம்பேத்கர் படம் வைத்ததாக வங்கி ஊழியர் பணிநீக்கம் - வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சங்கீதா

அம்பேத்கர் படம் வைத்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியரை மீண்டும் பணியில் சேர்க்க, பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த கெளரிசங்கர், கடந்த 2004-ம் ஆண்டு, அலுவலக அறையில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதாக புகார் எழுந்தது. அம்பேத்கர் படம் வைத்தது மட்டுமில்லாமல், பணி நேரத்தில் அடிக்கடி வெளியில் சென்று வந்தது, சங்கத்தினருடன் வந்து அதிகாரிகளை மிரட்டியது, வங்கியில் பிரச்சினை செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, கடந்த 2006-ம் ஆண்டு  கெளரிசங்கர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து வங்கி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய தொழிலாளர்கள் தீர்ப்பாயம், கெளரிசங்கருக்கு மீண்டும் பணி வழங்க கடந்த 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வங்கியின் பணி நீக்கம் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, கெளரிசங்கர் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சத்யநாராயண பிரசாத் அமர்வு, மத்திய நிதித்துறையின் சுற்றறிக்கையின் படி, அம்பேத்கர் புகைப்படத்தை, அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வைக்கலாம் எனக் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டி, மத்திய தொழிலாளர் தீர்ப்பாயத்தின் உத்தரவின் படி, கெளரிசங்கருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க வங்கி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.