தமிழ்நாடு

மெரினாவில் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

rajakannan

மெரினாவில் ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுக்கு அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதிகோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு இயக்கத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்த போது, ’மெரினா‌ கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லை’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘ஜல்லிக்கட்டு போராட்டத்தை தவிர 2003-ம் ஆண்டிற்கு பின் மெரினாவில் போராட்டங்கள் நடைபெறவில்லை’ என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் தெரிவித்தார். 

இதையடுத்து, காவிரியை விட மெரினா கடற்கரை முக்கியமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், போராட்டங்களை ஒழுங்குப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், போராட்டங்களை தடுக்க அரசுக்கு எந்த அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். 

இந்நிலையில், விவசாயி அய்யாக்கண்ணு ஒருநாள் மட்டும் மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று சென்னை காவல்துறைக்கு நீதிபதி ராஜா உத்தரவிட்டார். 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் இருந்த நிலையில், ஒருநாள் மட்டும் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எழுத்துரிமை, பேச்சுரிமையை வெளிப்படுத்துவதற்கு ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்று தெரிவித்த நீதிபதி, அமைதி வழியில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கலாம் என்று தெரிவித்தார்.