தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி: பள்ளிக் கலவரம் தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து மூன்று நாட்களுக்கு பின் பள்ளியில் நடந்த கலவரம், தீவைப்பு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதில், அப்பாவிகளும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களை அடையாளம் காணக் கோரியும், அவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரியும், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மாணவி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை கிருத்திகாவை அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளி செயலாளர் மிரட்டுவதாகவும், அதனால் அவரை உடனடியாக திருச்சி சிறைக்கு மாற்ற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்படுவதை தவிர்க்க, கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது, அவர்களுக்கு தேவையான சட்ட உதவியை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலம் வழங்க அனைத்து மாஜிஸ்திரேட்களுக்கும் அறிவுறுத்தும்படி உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ரத்தினம் ஆஜராகி அவசர வழக்காக விசாரிக்கும் கோரிக்கையுடன் வந்தபோது சந்திக்க மறுத்ததால், இந்த வழக்கை இந்த அமர்வில் நடத்த விரும்பபில்லை எனக் கூறி வேறு அமர்விற்கு மாற்றும்படி கோரிக்கை வைத்தார். அதை ஏற்று, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.