செய்தியாளர்: V M சுப்பையா
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில், சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், “வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால், பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியுள்ளார். அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்” எனக் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது சரிதான்” என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு மனுதாரர் தரப்பில், “குற்றப்பத்திரிகையில் வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை. அரசின் இந்த அறிக்கைக்கு விரிவான பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “காவல்துறையினர் விசாரணை நடத்தி கிழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். குற்ற பத்திரிகை மீது அதிருப்தி இருந்தால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம்” எனவும் சுட்டிக்காட்டினர்.
பின்னர், அரசின் அறிக்கைக்கு மார்ச் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, மார்ச் 10ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 27ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.