தமிழ்நாடு

"மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை" - சென்னை உயர் நீதிமன்றம்

JustinDurai
மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் எரிபட்டியை சேர்ந்த அமிர்தவல்லி என்பவர், தனது நிலத்திற்கு செல்லும் வழியில் உடல்களை தகனம் செய்வதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்விவகாரம் குறித்து பதிலளித்த அரசுத் தரப்பு, கிராம மக்களுக்கு மயானத்துக்கு நிலம் ஒதுக்கி உள்ள போதிலும், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் அதை பயன்படுத்த அனுமதிக்காததால் சாலை ஓரங்களில் உடல்களை எரிக்கும் நடைமுறையை பின்பற்றுகின்றனர் என்றும் அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து, மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை எனக்கூறிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும். மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் உடல்களை தகனம் செய்வதை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும்'' என்று உத்தரவிட்டார்.