தமிழ்நாடு

சிலைக்கடத்தல் வழக்கு விசாரணையில் தொய்வு: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

JustinDurai
சிலைக் கடத்தல் வழக்குகளில் ஒரு வழக்கு மட்டுமே முடிவுக்கு வந்துள்ளதாகவும், மற்ற வழக்குகளில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட சிலைக் கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது பற்றி விசாரணை கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கு, தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காணாமல் போனதாக கூறப்பட்டவற்றில் 25 வழக்குகள் பற்றிய ஆவணங்களை கண்டுபிடித்துள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த அறிக்கை குறித்து அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், சிலை கடத்தல் பற்றி பதிவானவற்றில் ஒரு வழக்கு மட்டுமே முடிவுக்கு வந்துள்ளதாக சுட்டிக்காட்டினர். வேறு எந்த வழக்கிலும் சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் அதிருப்தியுடன் குறிப்பிட்டனர். 16 வழக்குகளில் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படாதது குறித்தும் நீதிபதிகள் அதிர்ச்சி தெரிவித்தனர். கடத்தப்பட்ட சிலைகளை மீட்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் தீவிரம் காட்டவில்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், மாயமான 16 வழக்குகளின் கோப்புகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.