சென்னை உயர்நீதிமன்றம் - பாஜக
சென்னை உயர்நீதிமன்றம் - பாஜக புதிய தலைமுறை
தமிழ்நாடு

பாஜகவின் தாமரை சின்னத்திற்கு எதிரான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு!

webteam

செய்தியாளர்: முகேஷ்

இந்திய நாட்டின் தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும் நாட்டின் ஒருமைபாட்டை இழிவுபடுத்துவது எனவும் கூறி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், அகிம்சை சோசலிச கட்சியின் நிறுவன தலைவருமான காந்தியவாதி ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

BJP

அந்த மனுவில், “பாரதிய ஜனதா கட்சிக்கான தேர்தல் சின்னமாக தாமரையை ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக்கோரி கடந்த செப்டம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது மனுவை பரிசீலித்து, பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “தாமரை தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகளும் அதை மாநில சின்னமாக அறிவித்துள்ளன. மேலும் தாமரை ஒரு மதச் சின்னம் என்பதால், பா.ஜ.வுக்கு தாமரை சின்னம் ஒதுக்கியது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படியும், சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படியும் தவறு மட்டுமல்லாமல், அரசு சின்னங்களில் தாமரை இடம் பெற்றுள்ளதால் இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது” என சுட்டிக்காட்டப்பட்டது.

Court order

அதேசமயம் சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பான விதிகளை இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். மேலும், வழக்கில் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காக மனுதாரர் செலுத்திய 20 ஆயிரம் ரூபாயில், 10 ஆயிரம் ரூபாயை சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், மீதத்தொகையை மனுதாரர் திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டனர்.