யானையை வைத்து பொதுஇடங்களில் பிச்சை எடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சேகர் என்பவர், தனது யானையை பொதுநிகழ்ச்சிகளுக்கு அழைத்துச்செல்ல அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் பராமரித்து வரும் சுமா என்ற பெண் யானையை கோவில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதற்கான உரிமத்தை தலைமை வன பாதுகாப்பு அதிகாரி ரத்து செய்துள்ளதாக புகார் கூறியிருந்தார்.
வனத்துறை சார்பாக ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர் சந்தானராமன், சேகர் தனது யானையை வைத்து ஆசி வழங்குவதாக கூறி, பாகன்கள் மூலம் பொதுமக்களிடம் பணம் பெற்றதால் தான் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார். மேலும், மனுதாரர் தனது தவறை உணர்ந்து கடிதம் அளித்தால் தலைமை வனபாதுகாப்பு அதிகாரி தனது நடவடிக்கையை திரும்பப்பெறுவார் என உறுதியளித்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டி.கிருஷ்ணகுமார், யானைகளை ஆசிர்வதிக்க வைத்து பணம் பெறுவது வளர்ப்பு யானை பராமரிப்புச் சட்டப்படி குற்றமாகும் எனக் கூறியதோடு தனது கண்டனத்தையும் பதிவுசெய்தார். மேலும், வனத்துறை வழங்கும் பயிற்சி வகுப்புகளில் பாகன்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும், மனுதாரர் சேகர் தனது கோரிக்கை தொடர்பான ஆவணங்களை தலைமை வனபாதுகாப்பு அதிகாரியிடம் புதிய மனுவாக சமர்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.