தமிழ்நாடு

கைதியை நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கான்ஸ்டபிள்! - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

கைதியை நண்பன் வீட்டிற்கு அழைத்துச் சென்ற கான்ஸ்டபிள்! - நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

webteam

உண்மையிலுள்ள ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’ கான்ஸ்டபிளுக்கு சாதகமாக தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. 

தமிழ் சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு ‘மருதமலை’ என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து நம் அனைவரையும் மிகுந்த நகைச்சுவை மழையில் நனைய வைத்திருப்பார். அந்தப் படத்தில் கான்ஸ்டபிளான வடிவேலு ஒரு கைதியை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வது போல் காட்சி வரும். அப்போது அந்த கைதியின் வேண்டுகோளுக்கு இணங்க வடிவேலு அவரை தனது தாயை சந்திக்க அனுமதி அளிப்பார். இந்தக் காட்சி மக்களிடையே மிகவும் பிரபலமானது.

அந்தவகையில், உண்மையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. குலோதுங்கன் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் கைதியை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் வழியில் கைதியின் வேண்டுகோளை ஏற்று நண்பரின் வீட்டில் உணவு சாப்பிட அனுமதி அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் கான்ஸ்டபிள் குலோதுங்கன் தவறு செய்ததாக கூறி அவருக்கு உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

இந்த தண்டனையை எதிர்த்து குலோதுங்கன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி ஹரிபரந்தாமன் குலோதுங்கன் மீது எடுக்கப்பட்டிருந்த நடவடிக்கையை ரத்து செய்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து காவல்துறை உயர் அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அந்த அமர்வு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் கான்ஸ்டபிள் குலோதுங்கன் மீது எடுக்கப்பட்டிருந்த நடவடிக்கை உரிய விசாரணை இல்லாமல் எடுக்கப்பட்டது. ஆகவே அது செல்லாது என்று கூறி நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.