தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து வரி வழக்கில் தீபா, தீபக்கை சேர்க்கவும்: சென்னை உயர்நீதிமன்றம்

நிவேதா ஜெகராஜா

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து வரி வழக்கில் அவரின் உறவினர்களான தீபக் மற்றும் ஜெ.தீபாவை சேர்க்க வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2008, 2009 ம் ஆண்டுக்கான சொத்து வரி தொடர்பான கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி சொத்து வரி சட்டம் 35வது பிரிவின் கீழ் வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து, வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

பின்னாள்களில் அந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த முறையீட்டு வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா காலமாகி விட்டதால், அவரது வாரிசுகளான தீபக், தீபாவை வழக்கில் சேர்க்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரம் தள்ளிவைத்தனர்.