சென்னை நீதிமன்றம்
சென்னை நீதிமன்றம் pt desk
தமிழ்நாடு

"சிதம்பரம் கோயிலுக்குள் எந்த அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது? "-நீதிமன்றம் கேள்வி

webteam

சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியும் இன்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

temple

அந்த மனுவில், கோயிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள், மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பழமையான கோயில்களில் எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளபோதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளது. எந்த மாதிரியான பணிகள் நடக்கின்றன என்பதே தெரியவில்லை என்பதால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, கோயிலுக்குள் எப்படி கட்டுமானங்கள் மேற்கொள்ள முடியும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதியை நியமித்து அறிக்கை கோரப்படும் என தெரிவித்த நீதிபதிகள், எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப் படாது என்று உத்தரவாதம் அளிக்கிறீர்களா அல்லது தடை விதிக்கவா என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

இதையடுத்து எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாது என்று தீட்சிதர்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதை அடுத்து, அறநிலையத் துறை ஆணையர் மனுவுக்கு பதிலளிக்கும்படி பொது தீட்சிதர்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 6-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.