தமிழ்நாடு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி -சென்னை உயர்நீதிமன்றம்

webteam

தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திர தின 75 ஆம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளித்தும், அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எந்தப் பாதையில் செல்கிறார்கள், ஊர்வலத்தின் போது கோஷங்கள் எழுப்பக் கூடாது, காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்தப் பொருட்களும் பயன்படுத்தப்படாது போன்றவை தொடர்பான உறுதியை அளித்தால், அனுமதி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28-ம் தேதிக்குள் தமிழக காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும், நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.