madras high court
madras high court pt desk
தமிழ்நாடு

EPS-க்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு: நீதிமன்றம் இன்று உத்தரவு!

webteam

“முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் 4,800 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அளிக்கப்படும் இந்த புகார் மீது சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

EPS

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தும்படி, 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ‘நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்தது. அத்துடன் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

RS Bharathi

அதன்படி அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதன் விசாரணை கடந்த வாரம் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது.

அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் “லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் அறிக்கையை ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஏற்காததால், மீண்டும் விசாரணை நடைபெறுகிறது” என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக தனது வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டுமென ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில், “மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்படாத நிலையில், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை படிக்காமல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதனால் 2018 ஆம் ஆண்டு ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை முடிக்க வேண்டும். திரும்பப் பெற அனுமதிக்கக் கூடாது. மறுவிசாரணைக்கு ஒப்புதல் அளிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

Court order

இவற்றை கேட்ட நீதிபதி, 2018-ல் நடந்தப்பட்டு நீதிமன்றத்தில் மூடிமுத்திரையிட்டு, தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆராய்வதாகவும் அதன் அடிப்படையில் வழக்கில் முடிவெடுப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி அந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு உத்தரவுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இன்று அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.