தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீதான 3 ஆண்டு தடையை எதிர்த்த வழக்கு - நீதிமன்றம் புதிய உத்தரவு

jagadeesh

மூன்றாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதித்த தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2016ம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முனைவர் சே.பா. முகம்மது கடாஃபி, தேர்தல் செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, அவரை மூன்று ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் 2018ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து முகம்மது கடாஃபி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உத்தரவு இடையூறாக இருப்பதால்  அந்த உத்தரவை ரத்து செய்ய மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கும் முன், தனக்கு எந்த நோட்டீசும் வழங்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நோட்டீஸ் மனுதாரரின் ஏஜெண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.இதையடுத்து மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.