தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல் தாமதமாகி வருவது ஏன்?: உயர்நீதிமன்றம் கேள்வி

webteam

உள்ளாட்சி தேர்தல் தாமதமாகி வருவது ஏன் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. இதில் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனக்கூறி, திமுக தொடர்ந்த வழக்கில் உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டில், 2 நீதிபதிகள் அமர்வு மே 14க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இந்தச் சூழலில் கிருஷ்ணகிரியை சேர்ந்த முனியப்பா என்பவர் கடந்த அக்டோபரில் உள்ளாட்சி தேர்தலில் தனது வேட்பு மனு நிராகரிப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது உள்ளாட்சி தேர்தல் தாமதமாகி வருவது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதி, இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மதியம் 2.15 மணிக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். பிற்பகலில் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் நெடுஞ்செழியன் ஆஜராகி, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.