பாமக போராட்டத்தை அனுமதிக்க முடியாது - நீதிமன்றம் PT Web
தமிழ்நாடு

“வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்” - பாமக வழக்கின்போது நீதிமன்றம்

“போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் உங்கள் போராட்டத்தில் பங்கு கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என உங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பார்க்கலாம்” - நீதிமன்றம்

PT WEB

செய்தியாளர்: V M சுப்பையா

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சௌமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர்கோடத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.

சௌமியா அன்புமணி

ஏற்கெனவே அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக, மாணவர் இயக்கங்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டங்கள் அனைத்திற்கும் சென்னை காவல்துறையிலிருந்து அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யும் நபர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மாலையில் போலீசார் விடுவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வள்ளுவர் கோட்டம் பகுதியில் பாமக கட்சி சார்பில் சௌமியா அன்புமணி தலைமையில் 300க்கும் மேற்பட்ட மகளிர் அணியினர் போராட்டம் நடத்த இருப்பதாக கூறி சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறையிடம் மனு அளித்தனர். ஆனால் காவல்துறையினர் வழக்கம்போல் அனுமதி வழங்காமல் மறுத்துவிட்டனர். இருப்பினும் போராட்டம் நடக்கும் என பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு மட்டும் வள்ளுவர்கோட்டம் பகுதியில் போடப்பட்டது. தொடர்ந்து, போராட்டம் நடந்த நிலையில் அதில் ஈடுபட்ட பாமக-வினர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே பாமக போராட்டத்திற்கு அனுமதி வழங்க கோரி பாமக கட்சி சார்பில் வழக்கறிஞர் பாலு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு முறையீடு செய்தார். அப்போது போராட்டத்திற்கு அனுமதி வழங்க மறுத்த நீதிபதி, “போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் உங்கள் போராட்டத்தில் பங்கு கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என உங்கள் மனதில் கை வைத்து கூறுங்கள் பார்க்கலாம்.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்க பட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் போராட்டம் நடத்துவதற்கான ஏற்புடையது அல்ல; வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த சமூகத்தில் ஆண், பெண் என்ற பாகுபாடு இருப்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்” என்று வேதனை தெரிவித்தார். மேலும், “பாமக நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட முடியாது” என்று நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்