சின்னசேலம் பள்ளி மாணவி உடலை வாங்க பெற்றோருக்கு உத்தரவிடக்கோரிய அரசின் முறையீட்டை இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
சின்னசேலம் மாணவி மரணமடைந்ததை அடுத்து, அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் 3 அரசு மருத்துவர்கள் மற்றும் 1 ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூராய்வு நடத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தைதான் நாட வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து இன்று காலை வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
இதையடுத்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார் . அப்போது மறு உடற்கூராய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து, அவசரம் கருதி விசாரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதனை ஏற்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று மதியம் 2:15 மணிக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்ததுடன், அப்போது மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார்.