ரிக் இயந்திரத்தின் பாகங்களை ஒருங்கிணைக்கும் பணி முடிந்த நிலையில் குழி தோண்டும் பணி தொடங்கியுள்ளது
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். தற்போது 100 அடி ஆழத்தில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் பணி 37 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
பலகட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. அதாவது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டப்பட்டு குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறுக்கு அருகில் 2 மீட்டர் தொலைவில் 1 மீட்டர் அகலம், 110 அடி ஆழத்தில் இந்தக்குழி தோண்டப்படும்.
குழி தோண்டும் பணிக்காக ரிக் இயந்திரம், மீட்புப் பணி நடைபெறும் இடத்திற்கு வந்தது. இந்த இயந்திரத்தை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தும் பணி நடைபெற்றது. ஒருங்கிணைப்பு பணி முடிவடைந்த நிலையில் தற்போது குழி தோண்டும் பணியை இயந்திரம் தொடங்கியுள்ளது. ஒரு மணி நேரத்துக்குள் குழி தோண்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது