தமிழ்நாடு

விக்கி - நயன் ஜோடியின் வாடகைத்தாய் குழந்தைகள் குறித்து மா.சுப்ரமணியன் சொன்னது என்ன?

webteam

விக்கி - நயன் ஜோடி, முறையாக சட்ட விதிகளை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் குழந்தைகளை பெற்றார்களா என ஊரக மருத்துவ இயக்குனரகம் மூலம் விளக்கம் பெறப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டர் சண்முகசுந்தரம் பெயரில் புதிய இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் துவங்கப்பட்டுள்ள முதல் இருக்கை இது. இதில் பணியமர்த்தப்படும் பேராசிரியர் இங்கிலாந்து நாட்டில் பணியாற்றி வருகிறார். இவர் ஆண்டுக்கு ஒருமுறை இணைப்பு கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி வழங்குவார். இந்த இருக்கையை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ’’தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. இதுகுறித்து நாளை அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் எங்கு தட்டுப்பாடு என்று புகார் வந்தாலும் அதனை 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மருத்துவ பல்கலைக்கழக வரலாற்றில் இந்தியாவில் முதன்முறையாக ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு இருக்கை உருவாக்கப்பட்டு உள்ளது. சித்த மருத்துவ பல்கலைகழகத்தின் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டோம் ஆளுநர் எந்த முறையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என கேள்வி எழுப்பி இருந்தார் பல்கலைகழகம் துவங்கும் நேரத்தில் எந்த முறை உள்ளதோ அவ்வாரே நடைபெறும் என பதில் அளித்துள்ளேன் எனவே ஒப்புதல் அளிப்பார் என நம்பிக்கை உள்ளது’’ அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ’’திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாராவிற்கு நேற்று இரட்டை ஆண் குழந்தை பிறந்தது தொடர்பாக மருத்துவ ஊரக பணிகள் இயக்குனரகம் தரப்பில் விளக்கம் கேட்கப்படும். கருமுட்டை விவகாரம் தொடர்பாக தற்பொழுதான் வழிகாட்டுதல்கள் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இந்த ஜோடி கருமுட்டை செலுத்தி பெற்றார்களா எனவும் தெரியவில்லை. அதனால் விதிமுறைகளை மீறினார்களா எனவும் அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிட்டபட்டுள்ளது’’ எனவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர் என் ரவி, 

’’புதிய கண்டுபிடிப்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை புரிந்துகொண்டு அதனை ஏற்றுகொள்ள வேண்டும். தமிழக மருத்துவத்துறை ஏற்கனவே முதலிடத்தில் உள்ளது. இதுபோன்ற புதிய துறைகளை உருவாக்கி மற்றவர்களுக்கு எடுத்து காட்டாக அமைய வேண்டும் எனவும், 2047ஆம் ஆண்டு இந்தியா தன்னுடைய 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும்.

தற்போது வரை நாம் வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப கருவிகளை வாங்கி வந்தோம். ஆண்டுக்கு கிட்டத்தட்ட 50 மில்லியன் சிப் மற்றும் semi conductor- களை எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வந்தோம். வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து பொருட்களை வாங்கி வந்தால் அது எதற்கும் உதவாது என்பதற்காகவே தற்போது 10 மில்லியன் டாலர்களை ஒதுக்கி அதனை இங்கேயே உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவ துறையில் தற்போது எப்படி தமிழகம் முன்னோக்கி இருக்கிறதோ அதே போல IOT துறையிலும் வளர்ச்சியடைய வேண்டும்’’ என ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்தார்.