தமிழ்நாடு

சரண் அடைந்த நடராஜனுக்கு சிபிஐ நீதிமன்றம் ஜாமின்

webteam

சொகுசு கார் இறக்குமதி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜன், சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 

ஏற்கனவே பயன்படுத்திய வாகனம் எனக் கூறி, 1994-ஆம் ஆண்டில் புதிய லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்ததன் மூலம் 1 கோடியே 62 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக நடராஜன், பாஸ்கரன், யோகேஷ் பாலகிருஷ்ணன், வங்கி அதிகாரி சுஜாரிதா சுந்தரராஜன் ஆகியோருக்கு, சிபிஐ நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. 

இந்த தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், நடராஜனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிறைக்கு செல்வதிலிருந்து இடைக்கால விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிபிஐ நீதிமன்றத்தில் நேரடியாக நடராஜன் சரணடைந்து ஜாமின் பெற்றுக்கொள்ளுமாறும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதையொட்டி சிபிஐ நீதிமன்றத்தில் நடராஜன் இன்று சரணடைந்தார். அவருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஜாமின் வழங்கப்பட்டது.