ராகுல்காந்தி நேற்று தமிழ்நாடு குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதற்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்ற மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, “மத்திய பாஜக அரசு தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை ஆட்சி செய்ய முடியாது” என ஆவேசம் பொங்க பேசியிருந்தார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ச்சியாக புறக்கணிப்பதாகவும் அவர் சாடினார்.
குறிப்பாக ''நீட் குறித்த தமிழகத்தின் தொடர் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. கூட்டாட்சி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? மாநிலங்களுடன் கலந்து பேசி தீர்வு காண்பது. மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது. மாநிலங்களுக்கு தேவையானதை செய்வது தான் கூட்டாட்சி. தமிழகத்தை ஒருபோதும் மத்திய பாஜக அரசால் ஆள முடியாது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் எந்தவொரு மாநிலத்தையும் ஆள முடியாது'' என்று பேசியிருந்தார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதில் அவர், “அன்பிற்குரிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கருத்தாக்கத்தை புரட்சிகரமாக எடுத்துரைத்ததற்கு, ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் நான் என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன்.
கலாசார மற்றும் அரசியல் வேர்களில் சுய மரியாதையை மதிக்கும் தமிழர்களின் நீண்ட கால வாதங்களுக்கு, நீங்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய செய்தி: அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை