பவதாரிணி
பவதாரிணி pt web
தமிழ்நாடு

“இளையராஜா வீட்டின் மெல்லிசை அவர்” - பவதாரிணி குறித்து பாடலாசிரியர் விவேகா

Angeshwar G

இசையமைப்பாளர் இளையராஜா மகளும், பாடகியுமான பவதாரிணி காலமானார். அவருக்கு வயது 47. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று மாலை ஐந்தரை மணிக்கு அவரின் உயிர் பிரிந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் இருந்து பவதாரிணியின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு திநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பவதாரிணி

பாடலாசிரியர் விவேகா புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை பதிவு செய்தார். அவர் கூறுகையில், “யாரும் எதிர்பாராத மிக துயரமான செய்தி. அவர் மறைந்துவிட்டார் என கேள்விபட்டது மிக அதிர்ச்சியாக உள்ளது. இசைஞானி இளையராஜாவின் வீட்டில் வளர்ந்த மெல்லிசை அவர். மிக மென்மையாகவும் எளிமையாகவும் பழகக்கூடியவர். சமீபத்தில் கூட பட்டாம்பூச்சியின் கல்லறை எனும் திரைப்படத்திற்கு அவர் இசையமைத்தார். அவரது இசையில் அனைத்து பாடல்களையும் எழுதி இருந்தேன்.

மிகப்பெரிய இசைக்குடும்பத்தில் வந்த அவர் இன்னும் பல வளர்ச்சியை தனது வாழ்வில் கண்டிருக்க வேண்டியவர். கொடுநோயினால் அவர் உயிரிழந்தார் என்பது துயரமான செய்தி. அவரது ஆன்மா சாந்தி அடைய நான் பிரார்த்திக்கிறேன். இசையுலகில் இது பெரிய இழப்பு. அவரது குரலுக்கென்று தனித்துவம் இருந்தது” என்றார்.