L&T  முகநூல்
தமிழ்நாடு

“நீங்கள் செல்வம் பெருக்க.. வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்கணுமா” - L&T தலைவரை விளாசிய சு.வெங்கடேசன்!

நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அதற்குப் பதில், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள். வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்.

ஜெனிட்டா ரோஸ்லின்

L&T நிறுவனர் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியனிடம் கேள்வி வேலை நேரம் குறித்து சர்ச்சையாக பேசியது இணையத்தில் கடும் எதிர்ப்பை பெற்றுவரும்நிலையில், இதற்கு ஆதரவளித்து விளக்கமளித்துள்ளார் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர்.

அதில், ”வாரத்திற்கு 90 மணி நேர வேலை என்ற எல் & டி நிறுவன தலைவரின் கருத்து, பெரிய லட்சியத்தை பிரதிபலிக்கிறது. அசாத்தியமான உழைப்பை போட்டால் தான் அசாத்திய விளைவுகள் கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக "ஞாயிற்றுக்கிழமைகளில் என் நிறுவன ஊழியர்களை வேலை வாங்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். ஏனென்றால், நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன்.

நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் உற்றுப் பார்க்க முடியும்? அதற்குப் பதில், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள். நீங்கள் உலகின் உச்சத்தில் இருக்க வேண்டும் என்றால், வாரத்திற்கு 90 மணி நேரம் உழைக்க வேண்டும்.” என்று L&T நிறுவனர் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் எம்.பி. சு வெங்கடேசன் காட்டமான பதிவு வெளியிட்டுள்ளார்

அந்தப் பதிவில், “ வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டுமென எல் & டி தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம் பேசியுள்ளார். தொழிலாளர்கள் 40 மணி நேரம் வேலை செய்தே சுப்பிரமணியத்தின் வருட சம்பளம் 51 கோடி. முந்தைய வருடத்தை விட 43 சதவிகித உயர்வு. தான் மேலும் லாபமடைய தொழிலாளர்கள் 90 மணி நேரம் உழையுங்கள் என்கிறார்.

அலெக்ஜாண்டர் தனது கைகளை சவபெட்டிக்கு வெளியே விரித்து வைக்க ஏன் சொன்னார் தெரியுமா? சுப்பிரமணியன்கள் தொடர்ந்து வருவார்கள் என்பதால் தான். தொழிலாளி 8 மணி நேரத்தை சட்ட உரிமை ஆக்கியது ஏன் தெரியுமா? இது போன்ற அபத்தமான போதனைகளை நிரந்தரமாக சவப்பெட்டியில் அறையத்தான்.

நீங்கள் செல்வம் பெருக்க தொழிலாளர்களின் இணையர்களின் முகங்களை கொச்சைப்படுத்தும் துணிவை உங்களுக்கு எந்த லாபவெறி கொடுத்ததோ, அந்த லாபவெறியை முறித்து உங்களையும் மனித சுபாவத்திற்கு பக்கத்தில் கொண்டுவரத்தான் உழைப்பாளிகளின் உரிமையை இந்த உலகம் போற்றி பாதுகாக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.