தமிழ்நாடு

சாவியை ஆன் செய்தபடி பழுது பார்த்த மெக்கானிக்; திடீரென வெடித்து சிதறிய எல்.பி.ஜி ஆட்டோ!

webteam

ஆவடி அருகே ஆட்டோ பழுது நீக்கம் செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென தீ பற்றியதால் பரபரப்பு

சென்னை அருகே ஆவடியை அடுத்த கோவில் பதாகை திருமுல்லைவாயல் சாலையில் பிரசாந்த் என்பவர் ஆட்டோ பழுது நீக்கம் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் , இன்று பாண்டியன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டபோது ஆட்டோ சாவியை ஆன் செய்து வைத்துக் கொண்டு பழுது நீக்கம் செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக ஆட்டோ திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியதை கண்டு, அதிர்ச்சி அடைந்த மெக்கானிக் பிரசாந்த் , அருகில் உள்ளவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை உடனடியாக ஆவடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். எனினும் ஆட்டோ முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்தில் காயமடைந்த மெக்கானிக் பிரசாந்த் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தீ விபத்து குறித்து ஆவடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேஸ் ஆட்டோ பழுது பார்க்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.