தமிழ்நாடு

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை - மீனவர்கள் எச்சரிக்கை

webteam

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனம் காரணமாக பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, தருமபுரி, கோவை, தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இம்மாதத்தில் கிடைக்க வேண்டிய 9 சென்டிமீட்டர் மழையில் இதுவரை 8 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை அயனாவரத்தில் 13 சென்டிமீட்டர் மழையும், பெரம்பூர், நீலகிரி கே.பிரிட்ஜ் பகுதிகளில் தலா 12 சென்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 10 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. குன்னூரில் 8 சென்டி மீட்டரும் பொள்ளாச்சியில் 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.