தமிழ்நாடு

என்னை காதலித்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணமா? ராணுவ வீரர் மீது பெண் புகார்

webteam

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே காதலித்த பெண்ணை ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற ராணுவ வீரரின் திருமணத்தை அவரது காதலி தடுத்து நிறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சாரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபின். ராணுவ வீரரான இவருக்கும் மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 24 வயதான பட்டதாரி பெண்ணுக்கும் இடையே கடந்த மூன்றரை வருடங்களுக்கு முன்பு ஷேர்-சாட் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இதையடுத்து இந்த காதல் விவகாரம் சுபினின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து இவர்களது காதலை சுபினின் பெற்றோர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சுபினுக்கு வேறொரு பெண்ணுடன் ஜனவரி 23 ஆம் தேதி (நேற்று) திருமணம் நடைபெற போவதாகவும் அதற்கான திருமண முன்னேற்பாடுகள் நடைபெறுவதாகவும் அந்த பெண்ணிற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தன்னை காதலித்து ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயலும் சுபின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தக்கலை காவல் நிலையத்தில் அந்த பெண் புகாரளித்தார். இந்நிலையில், ராணுவ வீரர் சுபின் மீது, பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நம்பிக்கை மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.