தமிழ்நாடு

திருத்தணி: காதல் திருமணம் செய்த 3 மாதங்களில் காணாமல் போன இளைஞர் - மீட்டுத்தரக் கோரிக்கை

kaleelrahman

காதல் திருமணம் செய்து 3 மாதங்களே ஆன நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போன மகனை மீட்டுத் தரக்கோரி ஏஎஸ்பி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த தாடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசுக்குட்டி. அதே பகுதியைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணான கீர்த்தனாவை காதலித்து கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துள்ளார். ராசுக்குட்டி சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக திருமணமான ஒரே வாரத்தில் கீர்த்தனாவின் பெற்றோர் அவரை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டைவிட்டு சென்ற ராசுக்குட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து திருத்தணி காவல் நிலையத்தில் ராசுக்குட்டியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், புகார் கொடுத்து ஒருவாரம் ஆகியும் எந்த தகவலும் இல்லாததால் இன்று திருத்தணி ஏஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்டடனர்.

புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏஎஸ்பி சாய் பிரனீத் தெரிவித்ததை அடுத்து கிராமமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.