காதல் ஜோடி
காதல் ஜோடி புதியதலைமுறை
தமிழ்நாடு

வழிமறித்து பிரிக்கமுயன்ற உறவுகள்; கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து கதறிய ஜோடி.. உறுதியால் வென்ற காதல்!

யுவபுருஷ்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூரை சேர்ந்தவர் அழகு பாண்டி. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண்ணுக்கும் அழகு பாண்டிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகுபாண்டி மட்டும் காரைக்குடிக்கு சென்றுள்ளார். சில நாட்கள் இருவரும் தொலைபேசியில் உறையாடி வந்துள்ளனர்.

தொடர்ந்து, அழகுபாண்டியைப் நேரில் சந்திக்க நேற்றைய தினம் கோவையில் இருந்து காரைக்குடிக்கு வந்துள்ளார் அவரது காதலி. இருவரும் அங்குள்ள அய்யனார் கோவிலில் திருமணம் செய்துகொண்டு, பாதுகாப்பு கேட்டு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைய சென்றுள்ளனர்.

இந்த தகவல் அறிந்த அந்த பெண்ணின் உறவினர்களும், அழகு பாண்டியின் உறவினர்களும் காவல் நிலையம் அருகே இருவரையும் வழிமறித்து, பிரித்து அழைத்துச் செல்ல முயன்றனர். இதனால், காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்து கூச்சலிட்டனர்.

இதனைக் கண்ட போலீசார் காதலர்களை பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்துச் சென்று, இருவர் குடும்பத்தாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அழகு பாண்டியின் பெற்றோர், அவர் திருமணம் செய்த பெண்ணை மருமகளாக ஏற்று வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறியதையடுத்து, போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு காதலர்கள் இருவரையும் அனுப்பி வைத்தனர்.