தமிழ்நாடு

லாரி கவிழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உயிரிழப்பு

PT


நாமக்கல் அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.


அலங்காநத்தம் பகுதியிலிருந்து மண் பாரம் ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி ஒன்று நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி தூசூர் ஏரியை அடுத்த செம்பாமேடு பகுதி சாலை வளைவில் திரும்பும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி லாரி சாலையில் கவிழ்ந்தது. அப்போது அவ்வழியாக எதிர்புறத்தில் நாமக்கல்லிலிருந்து அலங்காநத்தம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கதிர்வேல் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் லாரியின் அடியில் சிக்கிப் படுகாயமடைந்தனர்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சுப்பிரமணியம் மற்றும் கதிர்வேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். சம்பவம் குறித்த தகவலறிந்து வந்த நாமக்கல் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப்படுத்திய நாமக்கல் போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் உயிரிழந்த கதிர்வேல், சுப்ரமணியம் ஆகியோர் நாமக்கல் அடுத்த என்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் தச்சு வேலை செய்து வருபவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய டிப்பர் லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.