தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி மகன் மீது கர்நாடகா லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு

webteam

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் மீது கர்நாடக லோக் ஆயுக்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவில் எடியூரப்பா முதலமைச்சராக இருந்தபோது, பெங்களூரு பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் 662 கோடி ரூபாயில் புதிய குடியிருப்பு கட்டடங்கள் கட்ட ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதற்காக எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், பெங்களூரு பெருநகர் வளர்ச்சி குழும தலைவராக இருந்த ஜி.சி.பிரகாஷ் மூலம் இந்தத் தொகை கைமாறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி மகன் சந்திரகாந்த் ராமலிங்கம் தொடர்புடைய 7 போலி நிறுவனங்கள் மூலம் லஞ்சப் பணம் கைமாறியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. லஞ்ச பேரம் குறித்த தொலைபேசி உரையாடல் ஏற்கனவே வெளியாகின. அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்துள்ள கர்நாடகா லோக் ஆயுக்தா காவல் துறையினர், சந்திரகாந்த் ராமலிங்கத்தையும் குற்றவாளியாக சேர்த்துள்ளது.