தமிழ்நாடு

ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள் இதை செய்யலாம்!

ஸ்மார்ட் கார்டு கிடைக்காதவர்கள் இதை செய்யலாம்!

webteam

மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) கிடைக்காதவர்கள், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை நகலுடன் தங்கள் புகைப்படத்தை வழங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை மாவட்டத்தில் பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் பெறப்படவில்லை என அறியப்படுகிறது. இதுவரை மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்கப்பெறாத குடும்ப அட்டை தாரர்கள் www.tnpds.gov.in என்ற இணைய முகவரியில் பயனாளர் நுழைவு பகுதியில் குடும்ப அட்டைக்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை பதிவுசெய்து நுழையலாம்.

குடும்ப அட்டை விபரமாற்றம் பகுதிக்கு சென்று குடும்ப தலைவரது புகைப்படம் மற்றும் இதர விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். இல்லை என்றால் புகைப்படம் பதிவேற்றம் செய்து விவரங்கள் திருத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னரே மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்படும். அட்டைதாரர்கள் வசதிக்கென கீழ் காணும் வழிமுறைகள் உள்ளது.

* அட்டைதாரர் தம் வசம் உள்ள இணைய வசதி வாயிலாக, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாம்.

* அரசு இ-சேவை மையம் மூலமாகவும் திருத்தங்கள் மேற்கொண்டு புகைப்படத்தை பதிவேற்றம் செய்யலாம். 

* இணைய வசதி இல்லாதவர்கள் அவர் தம் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட ரேஷன் கடை பணியாளரிடம் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.

*சரியான விவரங்கள் மற்றும் புகைப்படம் இல்லாத, மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்படாத அட்டைதாரர்கள் பற்றிய விவரம் நியாயவிலைக் கடைகளில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பெயர் இடம்பெற்றிருந்தால் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒருவழியை பயன்படுத்தி மின்னணு குடும்ப அட்டைபெற இயலும்.