தமிழ்நாடு

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.. எவையெல்லாம் இயங்கலாம்?

webteam

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தளர்வுகளுடனும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நள்ளிரவு 12 வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் அதாவது 2,9,16,23 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

பெருநகர சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்காணும் பணிகளும் அனுமதி அளிக்கப்படுகிறது.

தற்போது 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்களும் 75 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். உணவகங்கள் மற்றும் தேனீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை மொத்த இருக்கைகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண வேண்டும். குளிர்சாதன வசதி இருந்தாலும் பயன்படுத்தக்கூடாது.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை பார்சல் வழங்கலாம். சிறிய கோயில்கள், மசூதிகள், தேவாலயஙகளில் மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் தரிசனம் அனுமதிக்கபடும். பெரிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் திறக்கக்கூடாது. காய்கறிகள் மளிகைக்கடைகள் காலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மற்ற கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரை இயங்கலாம். ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.