தமிழ்நாடு

56 பள்ளிக் குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ஆயிரம் : நெகிழவைத்த ஆசிரியர்கள்..!

56 பள்ளிக் குழந்தைகளின் குடும்பத்திற்கு தலா ஆயிரம் : நெகிழவைத்த ஆசிரியர்கள்..!

webteam

நாகை மாவட்டத்தில் பள்ளிக்குழந்தைகளின் குடும்பத்திற்கு ஆசிரியர்கள் தலா ஆயிரம் ரூபாய் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நாராயண நாயக்கன் சாவடியில் அரசு உதவி பெரும் தொடக்க பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தலைமையாசிரியர் வீரராகவன் மற்றும் ஆசிரியைகள் சிவகாமசுந்தரி, சித்திரா, ஜெயலலிதா ஆகிய நான்கு பேர் பணியாற்றி வருகின்றனர். 56 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள்.

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், இந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் ஏழை குழந்தைகளின் குடும்பங்கள் வறுமையில் இருப்பது குறித்து சிந்தித்துள்ளனர். பின்னர் பள்ளியில் பணியாற்றும் நான்கு ஆசிரியர்களும், 56 குழந்தைகளின் குடும்பங்களுக்கும் தங்களால் இயன்ற உதவியை செய்ய அவர்கள் தீர்மானித்தனர்.

இதைத்தொடர்ந்து, 4 ஆசியர்களும் பணத்தை பங்கிட்டு பள்ளி குழந்தைகள் ஒவ்வொரின் குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாயை அளித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு நேரத்தில் பலரும் வீட்டில் குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் பொழுதைப்போக்கி வரும் நிலையில், ஏழைக் குழந்தைகளின் குடும்பத்திற்காக உதவி செய்த ஆசியர்களை அனைவரும் மனதார பாராட்டி வருகின்றனர்.