தமிழ்நாடு

டீ குடிக்க சென்று வெள்ளத்தில் சிக்கிய நபர் மீட்கப்பட்டது எப்படி? - கூடலூரில் பரபரப்பு!

JananiGovindhan

நீலகிரி மாவட்டம் கூடலூரில் கனமழை காரணமாக மங்குழி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலத்தில் நடந்து சென்ற நபர் தண்ணீருக்குள் விழுந்த நிலையில், ஊர்மக்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.

தொடர் கனமழையால் மங்குழி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் வழியாக மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை மீறி, மக்கள் வாகனங்களிலும், நடந்தும் பாலத்தின் வழியே கடந்தனர். காலையில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது தண்ணீருக்குள் விழுந்த நபரை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர்.

இதுதொடர்பாக வெள்ளப்பெருக்கில் சிக்கிய மாணிக்கம் புதிய தலைமுறை செய்தியாளரிடம் பேசியபோது, “டீ குடிப்பதற்காக மரப்பாலம் வழியாக சென்றிருந்தேன். டீ குடித்துவிட்டு திரும்பும்போது பாலத்தின் மீது ஆட்டோ ஒன்று சென்றதைக் கண்டுதான் நானும் பின்னாலேயே சென்றேன்.

ALSO READ: 

அப்போது பாலம் உடைந்துவிட்டதால் அங்கிருந்த கட்டையை பிடித்தபடியே மேலெழும்ப முயற்சித்தேன். இதனால் கயிறு கட்டி ஊர்மக்களெல்லாம் என்னை மீட்டெடுத்தார்கள்.” எனக் கூறியிருக்கிறார்.

இதனையடுத்து வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டது எப்படி குறித்து ஒருவர் பேசியிருந்தார். அதில், “என் பின்னால்தான் அவரும் வந்தார். ஆனால் திடீரென வெள்ளத்தில் சிக்கிவிட்டார். சுதாரித்ததும் அவரை லுங்கி மற்றும் கயிறுகளை கொண்டு மீட்டுவிட்டோம்” எனக் கூறியிருக்கிறார். இதுபோக தெப்பக்காட்டிலிருந்து மசினகுடிக்கு செல்லும் தரப்பாலத்தின் மீது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இருசக்கர வாகனங்கள் செல்ல காவல் துறையினர் உத்தரவிட்டிருக்கிறார்கள்.