தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இளங்கலை பட்டம் அவசியமா ? மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இளங்கலை பட்டம் அவசியமா ? மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

webteam

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் குறைந்தபட்ச கல்வி தகுதியாக இளங்கலை பட்டம் முடித்து இருக்க வேண்டும் என உத்தரவிட கோரிய மனுவினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு.

ராஜிவ் ராஜா, ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட சட்ட கல்லூரி மாணவர்கள் 5 பேர்  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தனர். அதில் எல்லா துறைகளிலும் அடிப்படை கல்வி தகுதி உள்ளது. ஆனால் உள்ளாட்சி, சட்டசபை, பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு கல்வி தகுதி ஏதும் இல்லை. தற்போது நவீன யுகத்தில் கணினி உள்ளிட்ட வசதிகள் பெருகியுள்ளது. மேலும் குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் பசுமை வீடு திட்டம், 100 நாள் வேலை திட்டம், சூரிய ஒளி தெரு விளக்கு, எம்எல்ஏ, வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. ஆனால் இந்தியாவையும் அதன் மாநிலங்களையும் ஆட்சி செய்ய விரும்பும் அரசியல்வாதிகளின், கல்வித் தகுதி குறித்து எந்தவிதமான வழிகாட்டுதல்களும் இல்லை. இந்தியாவை இன்னமும் வளரும் நாடு என்று கூறப்படுகின்றது. இதனால் இது குறித்து ஆராய்வது முக்கியம். இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் போது இந்தியாவில் நிலவும் எழுத்தறிவு விகிதம் மிகவும் குறைவு கல்வியறிவுள்ள, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அரசியல்வாதிகளால் தான் திறம்பட நிர்வகிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 80.33%, ஹரியானா 76.64%, ராஜஸ்தான் -67.06%, பீகார் -63.82% கல்வியறிவு பெற்றவர்களின் சதவீதம். மேலே குறிப்பிட்டுள்ள மாநிலங்களில், தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகமாக உள்ளது. பீகார், ராஜஸ்தான், ஹரியானா உள்ளாட்சித் தேர்தலில் கல்வித் தகுதிப் கட்டாயமாகும். ஆனால் தமிழ்நாட்டில் உள்ளூர் அரசியலமைப்புச் சட்டத்தில் போட்டியிட கல்வி தகுதி தேவை இல்லை. எனவே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்த பட்ச கல்வி தகுதியான இளங்கலை பட்ட படிப்பு படித்திருக்க வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இம்மனு மீதான முந்தைய விசாரணையில் மாநில தேர்தல் ஆணையத்திடம், அரசு வழக்கறிஞர் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சி,டி,செல்வம், பஷீர் அகமது அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்காததால் மனுவினை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.