தமிழ்நாடு

மறக்க முடியுமா கருணாநிதியை...!

webteam

* மத்திய மாநில உரிமைகளை ஆராய நீதிபதி ராஜமன்னார் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் தொடர்ச்சியாக, 1970ல் திருச்சியில் ஐம்பெரும் முழக்கங்களை வடிவமைத்துத்தந்தார் கருணாநிதி. அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமூதாயம் அமைத்தே தீருவோம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி ஆகியவை அனைவரின் கவனத்தையும் பெற்றது.

* 1942ல் எழுத்துப் பிரதியாகத் தொடங்கப்பட்ட முரசொலியை 75 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி, பவள விழா கொண்டாடியவர் கருணாநிதி. ‘முரசொலி’ நாளேட்டின் மூலம் மிகச் சிறந்த பத்திரிகையாளர் என்று அறியப்பட்டவர் கருணாநிதி.

* 1953ம் ஆண்டில் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, 6 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளை ராஜாஜி தலைமையிலான அரசு மூட உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து ராஜாஜி அறிவித்த குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து அண்ணா போராட்டம் அறிவித்தார். குலக்கல்வி அறிவிக்கப்பட்ட ஆண்டை நினைவூட்டும் வகையில் 53 பொதுக்கூட்டங்களில் கருணாநிதி உரையாற்றினார். அதன் விளைவாக ராஜாஜி பதவி விலகினார்.

* நாட்டில் நெருக்கடிநிலை பிறப்பிக்கப்பட்டபோது அதை கருணாநிதி உறுதியாக எதிர்த்து நின்றது, இந்திய அரசியலில் மிக முக்கிய பங்களிப்பாகப் பார்க்கப்படுகிறது. 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது, அடுத்த 24 மணி நேரத்தில் அதை எதிர்த்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 6 மாதங்கள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

* கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கும் எண்ணம் 1989ம் ஆண்டே கருணாநிதியின் சிந்தையில் உதித்தது. நாடு முடியும் இடமெனக் குமரியைக் கருதாமல், அது தமிழகத்திலிருந்தே தொடங்குகிறது என்பதை விளக்கும் வகையில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க கணபதி ஸ்தபதியோடு ஆலோசித்தவர் கருணாநிதி. அதன்படியே பின்னாளில் திருவள்ளுவருக்கு குமரியில் சிலை அமைக்கப்பட்டது.