தமிழ்நாடு

மறக்க முடியுமா கருணாநிதியை...!

மறக்க முடியுமா கருணாநிதியை...!

webteam

* கருணாநிதிக்கும் பத்மாவதிக்கும் 1944-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மு.க.முத்துவை பெற்றெடுத்த பத்மா, 1948ல் மறைந்தார். 1948ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கருணாநிதி- தயாளு அம்மாள் திருமணம் நடைபெற்றது. அதில் தலைமை சொற்பொழிவாளராக அண்ணா பங்கேற்றார். 

* திரையுலகில் வசனகர்த்தாவாக நுழைந்த கருணாநிதி மொத்தம் 26 படங்களை சொந்தமாகத் தயாரித்து வெளியிட்டார். 1957ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிடும் முன்பே, கருணாநிதியை செல்வந்தர் ஆக்கியிருந்தது திரைத்துறை. அவரது கோபாலபுரம் இல்லம் 1955ம் ஆண்டு வாங்கப்பட்டது. அத்தோடு, திமுக தலைவர்களில் சொந்தமாக கார் வைத்திருந்தவர்களில் முதல் பிரமுகராக கருணாநிதி திகழ்ந்தார்.

* கருணாநிதியும், எம்ஜிஆரும் அரசியலில் இருவேறு துருவங்களாக பின்னாளில் மாறினாலும், திரையுலகில் கருணாநிதியின் வசனத்தில் 9 திரைப்படங்களில் எம்ஜிஆர் நடித்திருக்கிறார். கருணாநிதியின் பெயரோடு வந்த முதல்படத்தின் நாயகன் எம்ஜிஆர்.

* கருணாநிதியின் வசனத்தில் சிவாஜிகணேசன் 8 திரைப்படங்களில் நடத்திருக்கிறார். அதில் கருணாநிதி எழுதிய, ‘பராசக்தி’ மற்றும் ‘மனோகரா’ திரைப்பட வசனங்களை சிவாஜி பேசியபோது அவை உச்சத்தைத் தொட்டன.

* இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒருபகுதியாக, 1965ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியை துக்க நாளாக அனுசரிக்கத் திட்டமிட்டது திமுக. அந்தப் போராட்டத்தில் மாணவர்களைத் தூண்டிவிட்டதாக, 1965ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கருணாநிதி கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டார்.