செய்தியாளர் - கார்த்திகேயன்
தமிழகத்தில் மது பாட்டில்கள் டாஸ்மாக் என்ற அரசு நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள், அதன் அடிப்படை விலையை காட்டிலும் கூடுதலாக 10 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டு, முந்தைய திமுக ஆட்சியின் மீது இருந்தது.
இந்த குற்றச்சாட்டை மையப்படுத்தியே, தற்போதைய முதலமைச்சர் விஜய், தேர்தல் பரப்புரையின்போது மிகப்பெரிய விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதனால், முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றதில் இருந்து, மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் கேட்கும் வழக்கம் மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவெக ஆட்சியிலும் டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கிறார்கள் என்று, எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதற்கிடையே, கடந்த ஆகஸ்டு 31-ஆம் தேதி அன்று, சட்டப்பேரவை கூடியபோது, டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், கள்ளச்சாராயத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த, மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கு ரூ.2.58 கோடி மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள் மற்றும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இதுமட்டுமின்றி, அவ்வாறு கூடுதல் விலையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த சிலரை, பணியிடை நீக்கம் செய்த அதிரடி நடவடிக்கையும், மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சென்னை எழும்பூர் வேனல்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் MRP விலைக்கே மது விற்கப்படும் என்ற விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பலகையைால் உற்சாகம் அடைந்துள்ள மதுபிரியர்கள், உற்சாகமாக மதுவாங்கி செல்கின்றனர். மேலும், கூடுதலாக வசூலிக்கப்படும் 10 ரூபாய் பணத்தையும், மதுபாட்டிலை திருப்பி கொடுத்தவுடன், நமக்கே மீண்டும் வழங்கிவிடுகிறார்கள் என்றும், மதுபிரியர்கள் தெரிவித்துள்ளனர்.