தமிழ்நாடு

மது கலந்த போதை பழச்சாறு தயாரிப்பு : சென்னையில் இருவர் கைது

webteam

சென்னையில் மது கலந்த போதை பழச்சாறு தயாரித்து விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் கொரோனா பொதுமுடக்கத்தால் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் சமூக விரோதிகள் நிலர் நூதன முறையில் வீட்டிலேயே சாராயம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். அவர்களை போலீசார் கண்காணித்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை ஸ்ரீராம் நகர் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் மதுபானங்கள் விற்பதாகவும், வீட்டிலேயே வைத்து கள்ளச்சாராயம் தயாரிப்பதாகவும் கோட்டூர்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன.

தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அந்த வீட்டில் வாடகைக்கு வசிக்கும் சீனிவாசன் என்பவர் பழச்சாற்றில் மதுவகைகளை கலந்து, மண்பாணையில் போட்டு காய்ச்சி அவற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் குற்றத்திற்கு வீட்டு உரிமையாளர் வெற்றிவேல் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை பழச்சாறு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட மண்பாணை மற்றும் மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.