நெல்லை மாவட்டத்தில் பணியின்போது இறந்த பணகுடியை சேர்ந்த தலைமைக் காவலருக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 48). இவர் எல்லை பாதுகாப்பு படையில் தலைமைக் காவலராக பெங்களூருவில் பணி புரிந்து வந்தார். இவருக்கு மீனா என்ற மனைவியும் ஐஸ்வர்ய லட்சுமி என்ற மகளும் முத்தையா முரளிதரன் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த உதயகுமார் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இறந்த உதயகுமாரின் உடலானது சொந்த ஊரான பணகுடிக்கு இன்று காலையில் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. உதயகுமாரின் உடலுக்கு அவரது உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பணகுடியில் உள்ள மயானத்தில் உதயகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் உதயகுமாரின் உடலை பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் ஆன்றோ பிரதீப் உள்ளிட்டோர் சுமந்து சென்றனர். மேலும் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உதயகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக்கொடியானது அவரது மகன் முத்தையா முரளியிடம் ஒப்படைக்கப்பட்டது.