தமிழ்நாடு

போலீஸ் அதிகாரியாக வருவோம்: ஆசைப்பட்ட மாணவிகளை உற்சாகப்படுத்திய காவல் ஆய்வாளர்

webteam

காவல்துறை அதிகாரியாக வருவேன் என விருப்பம் தெரிவித்த அரசுப் பள்ளி மாணவிகளை ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் தனது இருக்கையில் அமர வைத்து கௌரவித்த சம்பவம் மாணவிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

உலக பெண்கள் குற்றத் தடுப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுமார் 50 பேர் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு காவல் நிலையத்தை சுற்றிக் காண்பித்த போலீசார், சமுதாயத்தில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும், அச்சமின்றி சமுதாயத்தை எதிர்கொள்ளவும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து அவர்களின் எதிர்கால திட்டம் குறித்து இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் கேள்வி எழுப்பினார். அப்போது அங்கிருந்த 4 மாணவிகள் காவல் துறையில் சேர்ந்து பணியாற்றுவதுதான் குறிக்கோள் எனக் கூறினர். இதையடுத்து அந்த மாணவிகளை பாராட்டிய இன்ஸ்பெக்டர், தனது இருக்கையில் அவர்களை அமர வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த செயல் மாணவிகளை வெகுவாக உற்சாகப்படுத்தியது.