முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடி ஏரிக்கரையில் அடிக்கடி தென்படும் சிறுத்தைப் புலியை சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்திற்குள் வாகன நிறுத்துமிடம் அகற்றப்பட்டதாலும், தனியார் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டதாலும் அமைதியான சூழல் நிலவுகிறது. இதனால் அரிய வன விலங்குகள் கூட அடர்ந்த வனத்திற்குள் இருந்து வெளிவரத்துவங்கியுள்ளன. வன விலங்குகளை காண்பதற்கென்றே தேக்கடி வரும் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு போக்குவரத்து செய்கின்றனர். அப்போது சிறுத்தைப்புலி ஏரிக்கரையில் உலவுவதை பார்த்த படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். வனத்திற்குள் இருந்து அபூர்வமாக வெளிவரும் சிறுத்தைப்புலி, தற்போது அடிக்கடி வெளிவருவது சுற்றுலா பயணிகளின் உற்சாகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.