நெடுஞ்சாலைத்துறை டெண்டர் புகார் பற்றி சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதேபோல இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை எதிர்கொள்ள முதல்வர் பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனும் வலியுறுத்தியுள்ளார்.
அரசின் மீது தொடர்ந்து எழும் ஊழல் புகார்களும், சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் தமிழகத்துக்கு தலைகுனிவு என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ். பாரதி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு பங்கு உள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இதுதொடர்பான வழக்கில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.