தமிழ்நாடு

‘10 நாட்கள் என் முகத்தை நானே பார்க்கவில்லை’ கொள்ளையர்கள் தாக்குதலில் உயிர் பிழைத்த லாவண்யா உருக்கம்

‘10 நாட்கள் என் முகத்தை நானே பார்க்கவில்லை’ கொள்ளையர்கள் தாக்குதலில் உயிர் பிழைத்த லாவண்யா உருக்கம்

rajakannan

வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த ஐ.டி. ஊழியர் லாவண்யா காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். 

பள்ளிக்கரணை அருகே நடந்த வழிப்பறி கொள்ளையர்கள் தாக்குதலில் லாவண்யா படுகாயம் அடைந்தார். பின்னர்,  பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாவண்யாவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக விநாயகமூர்த்தி, நாராயணமூர்த்தி, லோகேஷ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் விநாயகமூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காவல் ஆணையரை நேரில் சந்தித்து லாவண்யா நன்றி தெரிவித்தார். காவல் ஆணையருடன் செய்தியாளர்களை சந்தித்த லாவண்யா, தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்றிய காவல்துறையினருக்கு நன்றி தெரிவிப்பதற்காக வந்ததாக கூறினார். 

செய்தியாளர்களிடம் பேசிய லாவண்யா, “என்னுடைய வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதில்லை. அதில் இருந்து மீண்டு வந்ததற்கு என்னுடைய மன உறுதிதான் காரணம் என்று எல்லோரும் கூறுகின்றனர். ஆனால், என்னுடைய மன உறுதி ஒரு சதவீதம் தான் காரணம். காவல் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எனக்கு அளித்த ஆதரவு தான் நான் மீண்டு வந்ததற்கு காரணம். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த இரண்டு ஆய்வாளர்கள் என்னை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். எனக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்தனர். என் வாழ்வில் நடந்த மோசமான சம்பவமாக இதனை கருதவில்லை. எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றி. 

எனக்கு திருமண நிச்சயம் நடந்துள்ளது என்பதையும் மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன். எனக்கு நேர்ந்த சம்பவத்தையும் அறிந்த பிறகும் திருமணத்திற்கு மாப்பிள்ளை குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர். கமிஷ்னர் என்னை வந்து பார்த்த போது, எனக்கு கடவுள் இரண்டாவது வாழ்க்கை கொடுத்துள்ளார் என்று கூறினார். என்னை திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருக்கும் என்னுடைய உட்பிக்காக இந்த வாழ்க்கை கிடைத்துள்ளது. எனக்கும் நிறைய பயம் இருந்தது. முதல் பத்து நாட்கள் என்னுடைய முகத்தை நானே பார்க்கவில்லை. எனக்கு ஆன காயங்களில் இருந்து நான் மிக விரைவில் குணமாகிவிட்டேன்” என்றார்.