தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் ரூ.230 கோடி மதிப்புள்ள ஹெராயினுடன் கரை ஒதுங்கிய மர்ம ட்ரம்!!

webteam

சீனமொழியில் அச்சிடப்பட்ட ட்ரம் ஒன்று, ரூ.230 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதை பொருட்களுடன் மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கியது

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ளது கொக்கிலமேடு கடற்கரை. அங்கு சீலிடப்பட்ட தகர ட்ரம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. அங்கிருந்த மீனவர்கள் அதை உடைத்து பார்த்தனர். அதன் உள்ளே 78 பொட்டலங்கள் இருந்தன. இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக கடலோர காவல் படை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய ட்ரம்மில் இருந்த 78 பொட்டலங்களை கைப்பற்றினர்.
அந்த பொட்டலத்தின் மேல் ரீபைன்ட் சைனீஸ் டீ என சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டு இருந்தது. ஒரு பொட்டலத்தை பிரித்து சோதனை செய்தனர்.

அது போதை பொருளாக இருக்கும் என சந்தேகம் அடைந்த கடலோர காவல் படை போலீசார் 78 பொட்டலங்களையும் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அறிவியல் ஆய்வு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் அது ஹெராயின் வகையை சேர்ந்த ‘மெத்தாம்பிடைமின்’ என்ற ஒரு வகை போதை பொருள் என்பது தெரிந்தது. 78 கிலோ மதிப்புள்ள இந்த போதை பொருட்களின் சர்வதேச மதிப்பு ரூ.230 கோடி என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த உயர்தர போதை வஸ்து மியாயன்மர் நாட்டிலிருந்து வந்திருக்கலாம் என போதை தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளனர். சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருள் எப்படி கடலில் மிதந்து வந்தது என்ற கோணத்தில் போதை தடுப்பு பிரிவினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்