தமிழ்நாடு

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி - கனிமொழி எம்பி

kaleelrahman

தூத்துக்குடி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விரைவில், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் தொடங்கும் என்று நம்புகிறோம் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி சிதம்பர நகர் ஆட்டோ காலனியில் வஉசி கல்விக்கழக சமூக பொறுப்பு நிதி ரூ. 17.4 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள பள்ளி வகுப்பறை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி வகுப்பறை கட்டிடம் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி பேசும்போது, “தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் தொடங்கும் என்று நம்புகிறோம். டெல்லி செல்லும் போது இதை நான் வலியுறுத்துவேன். முதலில் நிலம் வாங்கிக் கொடுத்த பிறகு தான் அவர்கள் மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகளை செய்ய முடியும் அதற்கான வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.