தமிழ்நாடு

மற்றவர்களுடைய சாப்பாட்டுத் தட்டுகளை கழுவப்போவதில்லை- பிக்பாஸ் குறித்து பேசிய லட்சுமி மேனன்

webteam

தமிழக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 4 ம் தேதியன்று தொடங்குகிறது. அதற்கான புரோமோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிவருகின்றன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாள் சம்பவங்களும் ரசிகர்கள் மத்தியில் விவாதமாவது வழக்கமாகிவிட்டது. அதில் பங்கேற்பவர்களுக்கும் கலையுலகில் சிறந்த எதிர்காலமும் உருவாகியுள்ளதால் நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு அதிகம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வார், இவர் கலந்துகொள்வார் என யூகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. நடிகை லட்சுமி மேனன் பங்கேற்பார் என்றும் செய்தி வெளியான நிலையில், தான் கலந்துகொள்ளவில்லை என அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, கும்கி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அஜித், கார்த்தி என உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், "நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. நான் மற்றவர்களுடைய சாப்பாட்டுத் தட்டுகளையும், கழிவறைகளையும் இப்போது கழுவப்போவதில்லை. இந்த நிகழ்ச்சிக்காக நான் கேமரா முன் போராடப்போவதும் இல்லை. இனிமேல் என்னைப் பற்றிய யூகங்களைக் கொண்டுவரமாட்டார்கள் என நம்புகிறேன்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஏற்கெனவே ரியோ ராஜ், ஷிவானி இருவரும் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்பவர்கள் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சில படங்களை வெளியிட்டிருந்தனர். கிரண் ரத்தோட், ரம்யா பாண்டியன் ஆகியோரும் பிக் பாஸ் வீட்டில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.