தமிழ்நாடு

விபத்தை சீர் செய்தபோது விபத்து: பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி

webteam

விபத்துக்குள்ளான லாரிகளை ஓழுங்குபடுத்திய, உதவி பெண் ஆய்வாளர் மீது மற்றொரு சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். 

நெல்லையிலிருந்து மதுரை செல்லும் புறவழிசாலையில் தாழையூத்து அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த சிலிண்டர் லாரி மீது தண்ணீர் லாரி ஓன்று மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து அந்த இடத்திற்கு வந்த தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் அகிலா, சாலையிலிருந்து விபத்துக்குள்ளான லாரிகளை, மீட்பு வாகனம் மூலம் ஒதுக்கி ஒழுங்குபடுத்தி உள்ளார். 

இதே நேரத்தில் மதுரையிலிருந்து நெல்லை நோக்கி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஓன்று மீட்பு பணியில் இருந்தவர்கள் மீது மோதியது. இதில் பெண் உதவி ஆய்வாளர் அகிலா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  இதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவரை பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து தாழையூத்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.