காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைந்தார்.
காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்தவர் குஷ்பு. இவர் அண்மைக்காலமாக பாஜகவுக்கு ஆதரவாக சில கருத்துகளை தெரிவித்து வந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு குஷ்பு மறுப்பு தெரிவித்து வந்தார்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி, பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோரை சந்திக்க குஷ்பு நேரம் கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு நேரம் ஒதுக்கப்படாததால் டெல்லி சென்ற குஷ்பு அவர்களை சந்திக்காமாலேயே தமிழகம் திரும்பினர்.
இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்புகூட பெரம்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்ட குஷ்பு பாஜகவை சரமாரியாக சாடினார். அதுகுறித்து செய்தியாளர்களிடமும் விவரித்தார் குஷ்பு. மேலும் காங்கிரஸில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை குஷ்பு சோனியாகாந்திக்கு எழுதிய கடித்தத்தில், காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதையடுத்து அவரின் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகை குஷ்பு பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். டெல்லி பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடனிருந்தார்.